மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள நிதி பற்றாக்குறை காரணமாக, கவுன்சிலிங் வைப்பு தொகையை திருப்பி தராமல், மருத்துவ கல்வி இயக்ககம் இழுத்தடிப்பு செய்வதாக, பெற்றோர் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.


அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 9,050 எம்.பி.பி.எஸ்., படிப்பு இடங்களும், 2,200 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 42,957 பேர் விண்ணப்பித்தனர்.

இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவங்கி, ஓரிரு மாதங்களில் முடிவடைந்தது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொள்ள, திரும்ப பெறக்கூடிய வகையில், அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள், 30,000 ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தினர்.



மேலும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும், நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர். கவுன்சிலிங் முடிந்த பின், சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில், அந்த பணம் வரவு வைக்கப்பட வேண்டும்.


இந்நிலையில், கவுன்சிலிங் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாணவர்களின் பணத்தை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.


சம்பந்தப்பட்ட பெற்றோர் சார்பில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் கேட்ட போதெல்லாம், 'ஒரு வாரத்தில் பணம் விடுவிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன், கவுன்சிலிங் முடிந்த ஓரிரு மாதங்களில், மாணவர்கள் செலுத்திய வைப்புத் தொகை வழங்கப்பட்டு விட்டது.


தற்போது, ஐந்து மாதங்களாக இழுத்தடிப்பு செய்கின்றனர். மாணவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை, மற்ற செலவுக்கு அதிகாரிகள் பயன்படுத்தி விட்டதாக தெரிகிறது. அதனால், நிதி பற்றாக்குறை என, காரணம் கூறுகின்றனர்.


இது குறித்து, மருத்துவ மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கவுன்சிலிங்கில் செலுத்திய வைப்புத் தொகையை, மருத்துவப் படிப்பில் சேர்ந்த பின், கல்லுாரிக்கான கல்வி கட்டணத்தில் கழித்து விட கோரினோம். அதையும் செய்யாமல், எங்களது பணத்தையும் தராமல் உள்ளனர். அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலட்சியமாக பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், 'வைப்புத் தொகையை விடுவிப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில், மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.

Advertisement