மாமியார் - மருமகள் குடுமிப்பிடி நாசிக் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

நாசிக்: மஹாராஷ்டிராவில், கோர்ட் வளாகத்தில் நடந்த மாமியார் - மருமகள் சண்டை மிகப் பெரிய மோதலாக உருவெடுத்து, இரு தரப்பினரும் மாறி மாறி அடித்து கொண்டனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரில், மாமியார் யமுனா யஷ்வந்த் நிகாம், 58, மற்றும் மருமகள் தீபக் ஹர்மான் சால்வே, 37, இடையேயான குடும்ப சண்டை, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நாசிக் நகர நீதிமன்றத்தில் இரு தரப்பினரும், பரஸ்பரம் தங்கள் உறவினர்களுடன் ஆஜராகி வந்தனர்.

சமீபத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விட்டு, கோர்ட்டுக்கு வெளியே வந்த மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து, சட்டைகளை கிழித்து கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரின் உறவினர்களும், திடீரென கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.

இதனால், அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது.

அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களை தள்ளி விட்டும், மோதியும் இரு தரப்பினரும் பயங்கரமாக சண்டையிட்டனர்.

இரு தரப்பினரும் சண்டையிட்டதை, நீதிமன்றத்திற்கு வந்த பெண் வக்கீல்கள் கூட தடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில், தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். மாமியார் - மருமகளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, விசாரித்தனர்.

மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை, அந்த கோர்ட் வளாகத்தில், அன்றைய பொழுது முழுதும் பரபரப்பான பேசு பொருளாக இருந்தது.

Advertisement