தோட்டக்கலை அலுவலர் குழாய் திருட்டில் சிக்கினார்; மூவர் கைது

கூடலுார்; நீலகிரி மாவட்டம், கூடலுார் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில், பாசன வசதிக்காக, மானிய விலையில் 'பிளாஸ்டிக்' குழாய்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, கூடலுார் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் வைத்திருந்த, 1.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 150 'பிளாஸ்டிக்' குழாய்கள் கடந்த வாரம் காணாமல் போனது.

இது தொடர்பாக, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூடலுார் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.ஐ., கவியரசு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கூடலுார் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன், விடுமுறை நாளில் 'பிளாஸ்டிக்' குழாய்களை திருடி நெல்லியாளம் பகுதியை சேர்ந்த கடைக்காரருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, தோட்டக்கலை அலுவலர் தயானந்தன், 32, கடை உரிமையாளர் சதானந்தன், 40, டிரைவர் முத்துக்குமார், 45, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, ரப்பர் குழாய்களையும் பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட, தோட்டக்கலை துறை அலுவலர் தயானந்தன், ஏற்கனவே, சத்தியமங்கலம் அருகே நகைதிருட்டு முயற்சி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்டில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு கூடலுார் தோட்டக்கலை துறை அலுவலராக பணியில் சேர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்,' என்றனர்.

Advertisement