குடிநீரை வீணாக்கிய 112 பேர் ரூ.5.60 லட்சம் அபராதம் வசூல்

1

பெங்களூரு: பெங்களூரில் குடிநீரை வீணாக்கிய 112 பேரிடமிருந்து, 5.60 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

கோடைக்காலத்தில், பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒன்று தான், குடிநீரை வீணாக்குபவர்களிடம் அபராதம் வசூல் செய்வது.

இது குறித்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

இதன்படி, கடந்த ஏழு நாட்களாக பெங்களூரில் உள்ள பல இடங்களில் ஆய்வு நடந்தது. இதில் குடிநீரை வீணாக்கிய 112 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக தலா 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இப்படி மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சட்டம் 1964 ன் பிரிவு 33 மற்றும் 34ன் கீழ், குடிநீரை வாகனம் சுத்தம் செய்வதற்கு, தோட்டக்கலை, பொழுதுபோக்கு, அலங்கார நீரூற்றுகள், வணிக வளாகங்களில் தேவையற்ற முறையில் உபயோகம் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூருக்கு குடிநீர் 100 கி.மீ., தொலைவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இது விலை மதிப்பற்றதாகும். எனவே, குடிநீரை யாரும் வீணடிக்க கூடாது. குடிநீரை வீணாக்குவோர் மீது அடுத்து வரும் நாட்களில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொது மக்கள் முழு ஆதரவை தெரிவிக்கவும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement