பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்: உதவி கிடைக்கவில்லை என வேதனை

2

புதுடில்லி: பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் 'எக்ஸ்' பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பக்கத்தை மீட்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயா கோஷல். பின்னணி பாடகி. இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளில் சினிமா பாடல்களை பாடி உள்ளார். மேடை கச்சேரி நடத்தி உள்ளார். இது தொடர்பான பதிவுகளையும், புகைப்படங்களையும் பேஸ்புக், எக்ஸ்( முன்பு டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு வந்தார். இதனால், அந்த பக்கங்களில், ஏராளமானோர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். எக்ஸ் பக்கத்தில் மட்டும் 69 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

சமீபத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக 10 சதவீதம் எண்ணெயை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 10 பேரை தேர்வு செய்தார். அதில் ஸ்ரேயா கோஷலும் இடம்பெற்று இருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது: எனது 'எக்ஸ்' பக்கம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய 'எக்ஸ்' குழுவினரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களை தவிர ஒரு உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை. உள்ளே நுழையவும் முடியவில்லை. எனவே தயவு செய்து, எனது 'எக்ஸ்' பக்கத்தில் இருந்து வரும் எந்த 'லிங்க்' ஐயும் கிளிக்செய்ய கூடாது என கேட்டுக்கொள்கிறேன். எந்த செய்தியையும் நம்ப வேண்டாம். அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. கணக்கு மீட்கப்பட்ட பிறகு, உடனடியாக வீடியோ மூலம் தகவல் தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், பிப்., 6ம் தேதிக்கு பிறகு, இந்த பக்கத்தில் இருந்து வேறு எந்த பதிவுகளும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா 'எக்ஸ்' கணக்கும் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement