கோவை அருகே ரூ.1 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: வாகன சோதனையில் போலீசார் அதிரடி

கோவை: கோவை பாலத்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1.05 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, பாலத்துறை ஜங்ஷனில் மதுக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில் கேரளா காயம்குளத்தைச் சேர்ந்த கிரண், நெபில் மற்றும் நவக்கரையை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து காரை தீவிரமாக சோதனை செய்ததில் 4.75 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 10 கிராம் மெத்தபெட்டமைன் ஆகிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், எட்டிமடையைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாகவும், அவர் திரும்ப கேட்டதால், மீண்டும் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து எட்டிமடையைச் சேர்ந்த முகமது நாசர் மற்றும் ஷாஜகான் ஆகியோரிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். உக்கடத்தை சேர்ந்த சாதிக் பாஷாவுக்கும் விற்பனை செய்ததாக இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 8.75 கிலோ கஞ்சா மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 10 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement