நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழாவில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா-வில் 20 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

இக்கோயில் மாசி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்க நேற்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடையுடன் புனித தீர்த்தக்குடங்கள் எடுத்தப்படி சந்தன கருப்பு கோயில் வந்தனர்.

அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீ வட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.

இன்று இரவு 9 :00 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.இதை தொடர்ந்து மார்ச் 7, 11, 14 ல் அம்மன் மின்ரதத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக நகர்வலம் வரும் .

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 18-ம் தேதி கழுமரம் ஊன்றி ஏறுதல் , பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

மறுநாள் காலை அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடையும்.

ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் திருஞானசம்பந்தன், பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார் செய்து வருகின்றனர்.

Advertisement