'ராஜ்யசபா 'சீட்' ஒதுக்காததில் அ.தி.மு.க., மீது மன வருத்தமில்லை'

3


அவனியாபுரம்: ''ராஜ்யசபா சீட் பிரச்னையில் அ.தி.மு.க., மீது மனவருத்தம் எதுவுமில்லை'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு மற்ற கட்சிகள் தவம் கிடக்கின்றன என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அவருடைய கருத்தை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர்கள் பிரச்னைகள் மட்டுமே முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. தமிழகம் முழுதும் தம் மொழியை கட்டாயமாக்க வேண்டும்.



தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் குறையும் என தகவல் பரப்புகின்றனர். அதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 40 எம்.பி., தொகுதிகளை குறைக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டால், அப்போதைக்கு தமிழக அரசுடன் இணைந்து தே.மு.தி.க., போராடும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் உயிர் இழப்பதும் தொடர்ந்து நடக்கின்றன.


பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, இது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி ஒப்பந்தம் போட வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெற்றால், மீனவர்கள் பிரச்னை ஓயும். தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., தெரிவித்தது. இப்போது இல்லை என்கின்றனர். அதற்காக மன வருத்தம் எதுவும் இல்லை. அப்பிரச்னையில், என்ன நடந்தது என்பதை காலம் வரும்போது கூறுகிறேன். தற்போதைய அரசியல் இயக்கங்கள், வெற்றிக்காக வியூக வகுப்பாளர்களை நம்புகின்றனர். ஆனால், நாங்கள் மக்களை மட்டுமே நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement