யாருடைய 'இ - மெயில்' சோதனைக்கு உள்ளாகும்? வருமான வரித்துறை தெளிவான விளக்கம்

4

புதுடில்லி : 'புதிய வருமான வரி மசோதாவின்படி, வரி ஏய்ப்பு செய்து சோதனைக்கு உள்ளாகும் நபர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராதபோது மட்டுமே, அவரது சமூக வலைதள கணக்கு, இ - மெயில் உள்ளிட்ட 'டிஜிட்டல்' தளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்' என, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


கடந்த 1961ல் இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில், தற்போதைய காலத்திற்கு ஏற்றாற்போல பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்துஉள்ளது.


வருமான வரிக்கணக்கு தாக்கலில் முன்னுக்குபின் முரணான தகவல்களை அளிப்போர் அல்லது வரி ஏய்ப்பு செய்து விசாரணை வளையத்துக்குள் சிக்குவோரின் சமூக வலைதள கணக்குகள், இ - மெயில், வாட்ஸாப், மடிக்கணினி உள்ளிட்ட 'டிஜிட்டல்' தளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து சோதனையிடும் அதிகாரத்தை, இந்த புதிய மசோதா அளிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இது, வரி செலுத்துவோரின் ஆன்லைன் தனியுரிமையை மீறும் செயல் என்ற விமர்சனமும் எழுந்தது.

இது குறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் அளித்த தெளிவான விளக்கம்:



மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதே இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதன் நோக்கம். வரி செலுத்துவோரின் சமூக ஊடகக் கணக்குகளையோ அல்லது ஆன்லைன் செயல்பாடுகளையோ வரித்துறை கண்காணிக்காது.


வரி ஏய்ப்பு செய்து விசாரணை வளையத்துக்குள் சிக்கும் நபருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தும்போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


சோதனையின் போது, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்வது, ஆதாரங்களை கண்டறிய உதவியாக இருக்கும். ஆய்வுக்கு உள்ளாகும் அனைவரின் டிஜிட்டல் தரவுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படாது. பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையில் சிக்குவோரின் டிஜிட்டல் தரவுகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement