குடியிருப்பு ஒதுக்கீடு குறித்து அமைச்சரிடம் கோரிக்கை

ஈரோடு: ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதி மக்கள், 25க்கும் மேற்பட்டோர், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை, அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர்.

தங்களுக்கு ஏற்கனவே (பழைய கட்டடம்) இருந்த வீடுகளின் வரிசைப்படி (கீழ் தளம், முதல் தளம்) வீடுகளை ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை குறித்து பேச நாளை (இன்று) முகாம் அலுவலகத்துக்கு வர அறிவுறுத்தினார்.

இதுகுறித்து வீட்டு வசதி துறை அலுவலர்கள் கூறியதாவது: மொத்தம், 330 வீடுகள் உள்ளன. ரூ.61 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். இதில் 97 பேர் முழுமையாக செலுத்தியுள்ளனர். 88 பேருக்கு குலுக்கல் முறையில் வீடு கிடைத்துள்ளது. இவர்களுக்கு வீடு இன்னும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே வசித்த வீடுகளின் வரிசைப்படி கேட்பவர்கள் சிலர் முழுமையாக பணத்தை செலுத்தவில்லை. முறைப்படி பணம் செலுத்தியவர்களுக்கு வீடு கிடைத்துள்ளது. அவர்கள் ஏற்கும்பட்சத்தில் மட்டுமே ஏற்கனவே வசித்தவர்களுக்கு வரிசைப்படி வீடு வழங்க முடியும். எனவே இரு தரப்பினரும் பேசி சம்மதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement