தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

3


புதுடில்லி: தேர்தல் நடைமுறையை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் டில்லி சட்டசபை தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்கத்திலும், ஒரே எண்ணுடன் பல வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி அது குறித்து ஆதாரங்களை வெளியிட்டு இருந்தது. இது தொடர்பான விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.

இச்சூழ்நிலையில் கடந்த வாரம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தும்போது, ' அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்வு கண்டு அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டு இருந்தார்.



இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைமுறைகளை சீர்படுத்துவது தொடர்பாக நடக்கும் கூட்டத்தில் கட்சிகள் பங்கேற்க வேண்டும். கட்சிகளின் வசதிக்கு ஏற்ற தேதியில் இக்கூட்டம் நடத்தப்படும். ஏதேனும் தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால், அது குறித்து ஆலோசனைகளை ஏப்.,30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement