ஒடிசா சட்டசபையில் கடும் அமளி; எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி சண்டை

புவனேஸ்வர் : ஒடிசா சட்டசபையில் நேற்று, ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால், சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.


ஒடிசாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அரசு உள்ளது. நேற்று காலை சட்டசபை கூடிய போது, கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் சுரமா பதி கூறினார். அதன்படி, கேள்விகளுக்கு, பா.ஜ., அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கைகலப்பு



'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து விட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும்' என கோரி, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பியபடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதை புறக்கணித்து, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.சி.மகாபத்ரா பதிலளித்தார். அவர் முன் நின்றபடி, காங்., - எம்.எல்.ஏ., தாராபிரசாத் பாஹினிபதி, பதிலளிக்க விடாமல் தடுத்தபடி இருந்தார்.


அவரை நோக்கி ஓடி வந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜெய்நாராயண் மிஸ்ரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் செயலை கண்டிக்கும் விதமாக, அவரை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டை காலரை பிடித்து இழுத்தார்.


இதையடுத்து, 'காங்., - எம்.எல்.ஏ.,வை பா.ஜ., - எம்.எல்.ஏ., அடித்து விட்டார்' என கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.


இதனால் சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்தது; நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு சபை கூடியது. அப்போதும், அமளி தொடர்ந்தது.

ஆளும் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டசபையில் உள்ள தங்கள் அறைகளில் கலந்தாலோசித்தனர்.

ஆர்ப்பாட்டம்



சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


எனினும், ஆர்ப்பாட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்ட பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் பொதுவாக அமைதி காத்தனர். காங்., - எம்.எல்.ஏ.,க்கள் செயலை, பா.ஜ., அமைச்சர்கள் கண்டித்தனர்.

Advertisement