நேருக்கு நேர் விவாதிக்க முடியுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!
சென்னை:'முதல்வர் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியமா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்; பார்த்துக்கலாம்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சவால் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லியில் தமிழகத்தை அடகு வைத்தது யார்? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாக பார்த்து, தலை வைத்ததில் துவங்கிய நாடக வரலாறு, இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டு கொண்டே இருக்கிறது.
எதிர்ப்பு நாடகம்
கட்சி துவக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்து, ஹிந்தி திணிப்பை முதன் முதலில் கொண்டு வந்த, காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக திட்டத்தை, முதலில் வரவேற்று, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் தி.மு.க.,வுக்கு, அ.தி.மு.க., குறித்து பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா.
மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, டெல்டா விவசாயிகளின்உரிமையை அடகு வைத்தவர்தானே நீங்கள்! 'நீட்' என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தானே?
அதே கூட்டணியை சேர்ந்தவர்களை வைத்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, நீட்டை கொண்டு வர வாதாடி, மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள்!
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை, கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதி செயல்களால், மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே, அடகு வைக்க முயற்சித்தவர்கள்தானே நீங்கள்! மூன்றாவது மாடியில் சி.பி.ஐ., ரெய்டு நடக்க, முதல் மாடியில் மூன்று மடங்கு சீட்டுகளை கொடுத்து, காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே?
பொம்மை ஆட்சி
ஆனால், பா.ஜ., கூட்டணியில் இருந்தபோதும், தமிழகத்தின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக்கூடாது என்ற அடிப்படையில், மக்களுக்கான ஆட்சி செய்து, தமிழகத்தை காத்தது அ.தி.மு.க.,
மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும், தமிழகம் முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., நடத்திய மக்களுக்கான ஆட்சி.
ஆனால், ஒன்றுக்கும் உதவாத, உருப்படாத, ஒரு வெற்று மாடல் அரசை நடத்திக் கொண்டு, தனக்குத்தானே கையை தட்டிக் கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்தவரை வெறும் விளம்பர மாடல்தான்!
'அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள்?' என்று மேடையில், முதல்வர் வீர வசனம் பேசுகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்... உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று, தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும், கொண்டு வாருங்கள்; பார்த்துக்கலாம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.