ரூ.7000 லஞ்சம் வாங்கி சிக்கிய வி.ஏ.ஓ., - உதவியாளர் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்:திருப்பூர் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க, 7000 ரூபாய் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வி.ஏ.ஒ., மற்றும் உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே முருகம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42. இவரது உறவினர் ஒருவர் ஊத்துக்குளி, இடையபாளையத்தில் சமீபத்தில் இடம் வாங்கினர். பட்டாவில் பெயர் சேர்ப்பு தொடர்பாக இடையபாளையத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.

இப்பணியை முடிக்க இடையபாளையம் வி.ஏ.ஓ., பிரபு, 44 மற்றும் அவரது உதவியாளர் கவிதா, 36, ஆகியோர் 7000 ரூபாய் லஞ்சமாக கேட்டனர். புகாரின்படி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் இவர்கள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

தற்போது, லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட, இருவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. நேற்று வி.ஏ.ஓ., பிரபுவை திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் மற்றும் உதவியாளர் கவிதாவை ஊத்துக்குளி தாசில்தார் முருகேஸ்வரன் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்துஉத்தரவிட்டனர்.

Advertisement