'ஜிப் லைனில்' தொங்கியபடி சாகசம்: ஜீன்பூல் மையத்தில் சுற்றுலா பயணியர் ஆர்வம்

கூடலுார்:கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் செயல்பட்டு வரும் 'ஜிப்லைனில்' தொங்கியபடி சாகசம் செய்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகள் தொங்கியபடி செல்லும் வகையில் கடந்த ஆண்டு, 'ஜிப்லைன்' அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
துவக்கத்தில், அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் அதில் சாகசம் செய்ய தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால், தற்போது இதன் பாதுகாப்பான செயல்பாடுகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதால், சாகச சுற்றுலா பயணம் செய்ய, சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஜிப் லைன்' அமைக்கப்பட்ட போது, சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்து அளவு இல்லை. அதில் செல்ல அச்சப்பட்டனர். ஆனால், நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், 'ஜிப் லைன்' தொங்கியபடி சாகச சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.