மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி; அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

இக்கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. இதைத்தொடர்ந்து மண்டபம் சீரமைப்பிற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கியது. நாமக்கல்லில் இருந்து கற்கள் வெட்டி எடுத்து கொண்டு வருவது, கனிமவளத்துறையிடம் அனுமதி பெறுவது போன்ற நிர்வாக காரணங்களால் சீரமைப்பு பணிகள் முடங்கின.

இந்நிலையில் 2023ல் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2 ஆண்டுகளுக்குள் நடத்தப்படும்' என அறிவித்தார். திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி அரசு ஒதுக்கியது. வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரிக்குள் திருப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

நேற்று அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, வேகமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். திருப்பணிகள் மற்றும் உபயதாரர்களின் நன்கொடை விபரங்களை கேட்டறிந்தார்.

Advertisement