நடுரோட்டில் பெண்ணுக்கு மிரட்டல் தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

அனுப்பர்பாளையம் : ரோட்டோரம் பழக்கடை வைத்திருந்த பெண்ணை ஆபாசமாக திட்டி, மிரட்டிய ஊராட்சி முன்னாள் துணை தலைவரான தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, கன்னிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சிவகாமி, 39. பெருமாநல்லுார் நால் ரோடு பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த, 16ம் தேதி பழக்கடைக்கு வந்த பெருமாநல்லுார் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் வேலுசாமி (தி.மு.க.,), கடை முன் வைத்திருந்த டேபிளை எடுக்கும்படி ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இது குறித்து தட்டிக்கேட்ட அவரின் கணவர் குமாரையும் ஆபாசமாக திட்டினார்.

இது குறித்து, சிவகாமி, பெருமாநல்லுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சாதி பெயரை சொல்லி திட்டியதால், பி.சி.ஆர்., பிரிவின் கீழ் வேலுசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்து, அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் விசாரணை நடத்த, திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement