திறக்கப்படாத பூங்கா; மக்கள் ஏமாற்றம் 

உடுமலை : திருமூர்த்தி அணை அருகே, பொதுப்பணித்துறையின், பூங்கா பூட்டியே கிடப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர். வரும் கோடை விடுமுறை சீசனில் பூங்காவை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

உடுமலை அருகே, திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பும் சுற்றுலா பயணியருக்கு, வேறு, பொழுதுபோக்கு இடம் இல்லை.

இதனால், சில ஆண்டுகளுக்கு, முன், பொதுப்பணித்துறை சார்பில், காண்டூர் கால்வாய் அருகே, சிறுவர் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. சில வாரங்கள் மட்டும், விளையாட்டு உபகரணங்களுடன், பயன்பாட்டில், இந்த பூங்கா இருந்தது. இந்த பூங்காவுக்கு எதிரில், பெரிய மரத்தடியில், மக்கள் அமரும் இருக்கையுடன், கால்நடைகள் சிலைகளுடன், சிறிய பூங்கா உருவாக்கப்பட்டது.

இப்பூங்காவும், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. திருமூர்த்திமலைக்கு தற்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வரத்துவங்கியுள்ளனர்.

எனவே, பூட்டியே கிடக்கும், பூங்காவை திறந்தால், சுற்றுலா பயணியர் பயன்பெறுவார்கள். வரும் கோடை விடுமுறை சீசனில், பூங்காவை திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement