பொதுப்பணித்துறை லஞ்ச வழக்கில் பாரபட்சம் பார்க்காமல் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் நாராயணசாமி  வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதாகி யுள்ள நிலையில், பாரபட்சமின்றி விசாரணையை சி.பி.ஐ., தொடரவேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சியில் முதல்வரின் துறைகள், கல்வி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்., சார்பில் சுட்டி காட்டி வருகிறோம். ஆனால், இதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் கூறவில்லை.

தற்போது பொதுப்பணித்துறையில் லஞ்ச வழக்கில் புதுச்சேரி மாநில தலைமைப் பொறியாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துறையில் புதிய பஸ் நிலையம் கட்டியது, குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

சங்கராபரணி ஆற்றில் கழிவுநீரை சுத்திகரித்து விடுவதற்கான ஒப்பந்தத்தில் அதிகளவில் தொகை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிலும் முறைகேடு நடந்துள்ளது. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், அவரது டைரி, கைபேசிகள் சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது.

ஆகவே, பாரபட்சமின்றி விசாரணை நடத்தவேண்டும். பொதுப்பணித்துறை அமைச்சர் விசாரணைக்கு தன்னை உட்படுத்தி பதவியை விட்டு விலகவேண் டும். முறைகேடுகள் புகாரில் தற்போது பூனைக்குட்டிகள் வெளிவந்துள்ளன. இனிமேல் தான் பூனைகள் வெளியே வரும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் சொத்து விவரங்களையும் விசாரிக்கவேண்டும். அவர் பதவியை விட்டு விலகக்கோரி அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தவுள்ளோம்.

பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement