ஜி.எஸ்.டி., 'சமாதான்' திட்டத்தில் பயனடைய 444 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அழைப்பு

கோவை; ஜி.எஸ்.டி., நிலுவை, வட்டி, அபராதம் தொடர்பாக, 'சமாதான்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வரும் 31ம் தேதிக்குள் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, கோவை மண்டல கமிஷனரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய ஜி.எஸ்.டி., கோவை மண்டல முதன்மை கமிஷனர் தினேஷ் ராவ் பங்கர்கர் கூறியதாவது:

53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரையின்படி இயற்றப்பட்ட, ஜி.எஸ்.டி., சட்டப்பிரிவு 128 'ஏ', வட்டி மற்றும் அபராதத்தைத் தள்ளுபடி செய்ய அதிகாரமளிக்கிறது.

2017-18, 2018—19, 2019-20 நிதியாண்டுகளுக்கு, ஜி.எஸ்.டி., முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் (எஸ்.சி.என்.,) வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டுகளுக்கு வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யும், 'சமாதான்' திட்டம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது.

இதன்படி, வரும் 31ம் தேதிக்குள், நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட வரி நிலுவையை முழுமையாகச் செலுத்தும் நிறுவனங்கள், வட்டி மற்றும் அபராத தள்ளுபடியைப் பெறலாம்.

இவ்வாறு, 31ம் தேதிக்குள் வரி நிலுவையை முழுமையாக செலுத்திய நிறுவனங்கள் மட்டும், ஆன்லைன் வாயிலாக, எஸ்.பி.எல்., 1 மற்றும் எஸ்.பி.எல்., 2 ஆகிய விண்ணப்பங்களை, வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து, இச்சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவை ஆணையரக எல்லைக்கு உட்பட்ட, 444 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இந்த சலுகையைப் பெற, தகுதி உடையவை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., சரக அதிகாரிகள் வாயிலாக, பதிவு செய்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கூறிய நிதியாண்டுகளுக்கு நிலுவை வைத்துள்ளவர்கள், அதற்கான தொகையைச் செலுத்தி, வட்டி, அபராத தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement