குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முடக்கம் தனியார் ஆலைகளின் நெருக்கடி காரணமா?

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக இருக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், 20 லிட்டர் கேன், 35 - 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், குடியிருப்புவாசிகளுக்கு தினமும், 70 - 100 ரூபாய் வரை தண்ணீருக்கு செலவாகிறது.

குடியிருப்புவாசிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக, கடந்த செப்டம்பர் மாதம், என்.டி.சி.இ.எல்., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கட்டடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பிற்கான உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்து, ஆறு மாதங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் திட்டம் முடங்கியுள்ளது.

இதனால், அதில் உபகரணங்கள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:

திருவேங்கிடபுரம் ஊராட்சியில் இரண்டு தனியார் குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன. அவர்களின் வருவாய் பாதிக்கும் என்பதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளனர்.

இதை பயனுக்கு கொண்டு வந்தால், தனியார் குடிநீர் ஆலைகளின் வருவாய் பாதிக்கும் என்பதால், நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டப்படுகிறது. தனியார் ஆலைகளின் நெருக்கடியால், திருவேங்கிடபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முடங்கியுள்ளது.

எனவே, சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement