தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!

27

சென்னை: 'தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அவரது கருத்தை பேசுகிறார்' என தி.மு.க., த.வெ.க., இடையே தான் போட்டி என்ற கருத்துக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்துள்ளார்.


சேலத்தில் செய்தியாளர்களை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இ.பி.எஸ்., பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:



நிருபர்: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே?


இ.பி.எஸ்.,: அவருடைய கருத்தை சொல்கிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு பேசுகிறார். நாட்டில் உள்ள எல்லா கட்சி எல்லா கட்சி தலைவர்களும் அப்படி தான்.


நிருபர்: ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. நீங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கீங்க, அவர் இந்த வார்த்தையை கூறியுள்ளாரே?


இ.பி.எஸ்.,:
அவரிடம் போய் கேளுங்கள். அ.தி.மு.க., தான் பிரதான எதிர்க்கட்சி என மக்கள் அங்கீகரித்துள்ளனர். புதிய கட்சி தொடங்குபவர்களுக்கு அ.தி.மு.க., தலைவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

முன்னதாக, சமூக வலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:

நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழகம் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய தி.மு.க.,விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி


அக் 2021- அனு, கீர்த்திவாசன்


நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்


ஜூன் 2022- தனுஷ்


ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி


ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ


செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி


மார்ச் 2023- சந்துரு


ஏப்ரல் 2023- நிஷா


ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்


டிசம்பர் 2023- ஆகாஷ்


அக்டோபர் 2024- புனிதா

மார்ச் 2025-இந்து, தர்ஷினி

இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் ரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?



மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் முதல்வர் ஸ்டாலின்! மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.


வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்! இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement