கடல், கரையோரங்களில் கனிம வளம் எடுக்க அனுமதித்தால் தொடர் போராட்டம் முடிவு

ராமநாதபுரம்:தமிழக கடற்கரையோரப்பகுதிகளில் கனிம வளம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதை கண்டித்து கடல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இதுதொடர்பாக கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:

மத்திய அரசு நீல பொருளாதாரம் என்ற பெயரில் மீனவர்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. நாட்டின் 14 கடலோர மாநிலங்களிலும் உள்ள கடல் பகுதியை 25 மண்டலங்களாக பிரித்து ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 986 சதுர கி.மீ., பரப்பளவிலான கடல் பகுதியில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டிட ைஹட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகளை கடல், கடற்கரையோரங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி முதல் துாத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் சதுர கி.மீ.,ல் 24 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

தற்போது பாம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்திற்கு 50 துாண்கள் கடலில் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக முயல்தீவு, குருசடை தீவுகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் கனிம வளங்கள் எடுக்க அனுமதி வழங்கினால் முற்றிலுமாக கடல் வளம் பாதிக்கப்படும்.

அரிட்டாபட்டியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது போல் ராமநாதபுரம், துாத்துக்குடி பகுதிகளில் கடல் தொழிலாளர்கள் சார்பில் மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூட விரைவில் முடிவு செய்வர் என்றார்.

Advertisement