177 சவரன் தங்க நகைகள் மோசடி வழக்கு 'கமிஷன் ஏஜன்ட்'டின் சகோதரர் கைது

யானைக்கவுனி, வேப்பேரியைச் சேர்ந்தவர் லஷ்மண்குமார், 44. இவர், சவுகார்பேட்டையில் 'சிவம் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், தங்க நகைக்கடை நடத்தி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடையில், 'கமிஷன் ஏஜன்டாக' தர்மேஷ் ஜெயின் என்பவர் பணிபுரிந்தார். கடந்த டிச., 14ம் தேதி லஷ்மண்குமார், 177 சவரன் தங்க நகைகளை, வாடிக்கையாளர் குல்திப் ராவல் என்பவரிடம் ஒப்படைக்குமாறு தர்மேஷ் ஜெயினிடம் கொடுத்து அனுப்பினார்.

சிறிதுநேரம் கழித்து லஷ்மண்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட தர்மேஷ் ஜெயின், தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், நகைகளை மறுநாள் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, 16ம் தேதி லஷ்மண்குமாரை தொடர்பு கொண்ட தர்மேஷ் ஜெயின், தன் அண்ணன் அல்பேஷ்குமார் ஜெயின், ஆந்திராவில் நகை கடைகளுக்கு தங்க நகைகளை விற்கும் ஏஜன்டாக வேலை செய்து வருவதாகவும், நகைகளை மாற்றி எடுத்து சென்று அவர் விற்பனை செய்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நகைகளுக்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறினார்.

ஆனால், பேசியபடி தர்மேஷ் ஜெயின் பணத்தை கொடுக்காததோடு, பல்வேறு காரணங்களை கூறி லஷ்மண்குமாரை தொடர்ந்து ஏமாற்றி வந்தவர், திடீரென தலைமறைவானார்.

இது குறித்து லஷ்மண்குமார், யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அவரது சகோதரர் அல்பேஷ்குமார் ஜெயின், 46, என்பவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரதான குற்றவாளியான தர்மேஷ் ஜெயினை, தேடி வருகின்றனர்.

Advertisement