பக்கவாட்டு தடுப்பில் பைக் மோதி மேம்பாலத்திலிருந்து விழுந்தவர் பலி

பள்ளிக்கரணை, தாம்பரம், சேலையூர் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர் பரூக், 24. இவர், தனது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார்.

இவர், புதிதாக டியூக் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். அதில், தினசரி இரவு நேரத்தில், அப்பகுதியில் சுற்றி வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2:30 மணிக்கு, தனது இருசக்கர வாகனத்தில், காமராஜபுரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மேடவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்றபோது, மேம்பால வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பைக், பக்கவாட்டு சுவரில் மோதியது.

இதில், துாக்கிவீசப்பட்ட பரூக் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பரூக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement