இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, இரும்பு கம்பிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் புறவழிச்சாலை குறுக்கே கடந்து கள்ளக்குறிச்சிக்கு வருவது வழக்கம். இருவழிச்சாலையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் குறுக்கே கடக்க முடியாதவாறு சென்டர் மீடியன் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இதனால் நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் புறவழிச்சாலையை குறுக்கே கடந்து செல்ல முடியாமல், சுமார் ஒரு கி.மீ., துாரம் வரை சுற்றி சென்று கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

இதையொட்டி மர்மநபர்கள் சிலர் சென்டர் தடுப்புச்சுவரை சேதப்படுத்தி, புறவழிச்சாலையை குறுக்கே கடந்து சென்றனர். உடைந்த சென்டர் மீடியன் தடுப்புச்சுவரை சரிசெய்து, பேரிகார்டு வைத்தாலும் அதை தள்ளி வைத்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து சென்றனர்.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், குறுக்கே கடந்து செல்லும் பைக் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் நீடித்தது.

இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சென்டர் மீடியன் தடுப்புச்சுவர் உடைக்கப்பட்ட பகுதியில், நிரந்தரமாக பைக்குகள் செல்ல முடியாதவாறு இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement