அவலநிலையில் பள்ளிக்கல்வி: அண்ணாமலை குற்றச்சாட்டு

47

சென்னை: தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வி அவல நிலையில் இருக்கிறது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சொந்தத் தொகுதியான, திருவிடைமருதூர் அம்மன்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் நிலை இதுதான். கட்டிடங்கள் இல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, மரத்தடியிலும், ஷெட்டுகளிலும், ஒரே கட்டிடத்திலும் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பள்ளிக் கல்வி, உயர்கல்வி என கல்வித் துறைக்கான இரண்டு அமைச்சர்களின் சொந்தத் தொகுதியில் உள்ள பள்ளிகளிலேயே கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வி எத்தனை அவல நிலையில் இருக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு சான்று.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 5,000 பள்ளிகள் கட்டினோம், 6,000 பள்ளிகள் கட்டினோம் என்று கதை விட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே. மீண்டும் மீண்டும் கேட்கிறோம். எந்தெந்த மாவட்டங்களில், எவ்வளவு நிதியில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற வெள்ளை அறிக்கை வெளியிட என்ன பயம் உங்களுக்கு?

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement