துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு பாதை ஏற்படுத்தி தர மனு

விழுப்புரம்: வளவனுாரில் துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு, நிரந்தர பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

வளவனுார் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு, கடந்த 1969ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சி காலத்தில், ரயில் நிலையம் அருகே உள்ள பஞ்சாயத்து தோப்பு பகுதியில் கட்டித்தரப்பட்டது.

அங்கு, வளவனூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தே குடியிருப்புக்கு சென்று வருகின்றனர். குடியிருப்புக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அந்த பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக பட்டா வழங்காமல் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி, ரயில்வே துறையினர் திடீரென, துப்புரவு ஊழியர் குடியிருப்புக்கு செல்லும் பாதையை அடைக்க வந்தனர். அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இதனால், இங்குள்ள 60 துப்புரவு குடும்பத்தினர், ரயில்வே தண்டவாளத்தை கடக்காமல், சாலை வழியாகச் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.

Advertisement