நேந்திரன் வாழை விலை உயர்வு

மேட்டுப்பாளையம்; நேந்திரன் ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்பனை ஆனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அன்னுார் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும்.

நேற்று நடந்த ஏலத்திற்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 3000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த ஏலத்தில், 30 வியாபாரிகள் பங்கேற்றனர். கேரளாவில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு, நேந்திரன் விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் கூறுகையில், '' ஏல மையத்திற்கு, நன்கு முதிர்ந்த நேந்திரன் வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனால் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் 25 முதல் 50 ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த வாரம் அதிக பட்சமாக, 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கேரளாவில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு நேந்திரன் விலை உயர்ந்துள்ளது. அடுத்த வாரமும் விலை உயர்வாக இருக்க வாய்ப்பு உள்ளது.

கதலி ஒரு கிலோ ரூ. 25 முதல் 45, பூவன் ஒரு வாழைத்தார் ரூ. 150 முதல், 450, செவ்வாழை ரூ.150 முதல் 850, தேன் வாழை ரூ. 650, ரஸ்தாலி ரூ. 500, ரோபஸ்டா ரூ. 350, மொந்தன் ரூ. 50 முதல் 150 வரை ஏலம் போனது,'' என்றனர்.

Advertisement