ஹாரி புரூக் புதிய கேப்டன்: இங்கிலாந்து அணிக்கு

லண்டன்: இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் (ஒருநாள், 'டி-20') கேப்டனாக பட்லர் இருந்தார். பாகிஸ்தான், துபாயில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனையடுத்து கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகினார்.

இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு புதிய கேப்டனாக ஹாரி புரூக் 26, நியமிக்கப்பட்டார். கடந்த 2022ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், துணைக் கேப்டனாக இருந்தார். கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பட்லர் விலகியதால் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார் புரூக். இதுவரை 24 டெஸ்ட், 26 ஒருநாள், 44 சர்வதேச 'டி-20' போட்டியில் விளையாடி உள்ளார்.
பிரிமியர் கிரிக்கெட் 18வது சீசனுக்கான ஏலத்தில் டில்லி அணியில் ஒப்பந்தமான புரூக், கடைசி நேரத்தில் விலகியதால் இத்தொடரில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.
புரூக் கூறுகையில், ''இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப் பெரிய கவுரவம். இளம் வயதில் கிளப் அணிக்காக விளையாடிய போது, இங்கிலாந்துக்காக விளையாடவும், அணியை வழிநடத்தவும் விரும்பினேன். நீண்ட நாள் கனவு நனவானது,'' என்றார்.

Advertisement