மறுபடியும் 'மணக்குமா' மலர் சந்தை? எதிர்பார்க்கின்றனர் பூ வியாபாரிகள்

கோவை; கோவையில் ரூ.92 லட்சத்தில், 97 தரைக்கடைகளுடன் கட்டப்பட்ட, 'மலர் சந்தை' மூடிக்கிடக்கிறது.

கோவை - மேட்டுப்பாளைம் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்படுகிறது.

மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டதாலும், ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடியதாலும், கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் தற்காலிகமாக பூ மார்க்கெட் மூடப்பட்டது.

மாற்று ஏற்பாடாக, 'அம்மா' உணவகம் அருகே, ரூ.92 லட்சத்தில், 97 தரைக்கடைகள் கட்டப்பட்டன. இவ்வளாகத்துக்கு, 'மலர் சந்தை' என பெயர் சூட்டப்பட்டது. அச்சமயத்தில், பூ வியாபாரிகள் பயன்படுத்தினர். அதன்பின், புதுக்கடைகள் என்பதால், ஏலம் கோருவதற்கான ஏற்பாடு நடந்தது. ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால், வியாபாரிகளுக்கு ஒதுக்காமல் நிறுத்தப்பட்டது.

அதன்பின், 'நமக்கு நாமே' திட்டத்தில், பூ வியாபாரிகள் பங்களிப்புடன், பழைய மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதன்பின், மலர் சந்தை வளாகம் மூடப்பட்டுள்ளது. மீண்டும் பூ மார்க்கெட் செயல்பட வாய்ப்பில்லாத பட்சத்தில், காய்கறி மார்க்கெட் உருவாக்கவோ அல்லது வாரச்சந்தை நடத்துவதற்கோ, அனுமதி அளிக்க வேண்டுமென்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது.

Advertisement