பால் உற்பத்தியை அதிகரிக்க 'ஊறுகாய் புல்' பரீட்சார்த்த முறையில் ஆராய்கிறது கால்நடைதுறை

புதுச்சேரி : புதுச்சேரியில் பால் உற்பத்திக்காக 75 சதவீத மானிய விலையில் ஊறுகாய் புல்லை வழங்க திட்டமிட்டுள்ள கால்நடை துறை, அந்த திட்டம் குறித்து பரீட்சார்த்த ஆய்வினை துவங்கியுள்ளது.

கறவை பசுக்களுக்கு பசுந்தீவனம் தான் உயிர் தீவனம். ஆனால் மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்ட இக்காலத்தில், கால்நடை வளர்ப்போர் தீவனம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இது பால் உற்பத்தியிலும் எதிரொலிக்கின்றது.

புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க 75 சதவீத மானியத்தில் கால்நடைகளுக்கு சைலேஜ் எனப்படும் ஊறுகாய் புல்லை வழங்க கால்நடை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக பரீட்சார்த்த முறையில் ஆராய்வினை துவங்கியுள்ளது.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீவன பிரிவில் ராமநாதபுரம், கூடப்பாக்கம், சோம்பேட், கரிக்கலாம்பாக்கம், அபி ேஷகப்பாக்கம், டி.என்.பாளையம் பால் உற்பத்தியாளர்களுக்கு தலா 50 கிலோ ஊறுகாய் புல் வழங்கப்பட்டது.

இவர்கள் ஒரு கறவை பசுவினை தேர்வு செய்து வரும் 15 நாட்களுக்கு தினமும் 10 கிலோ வீதம் ஊறுகாய் புல் வழங்க வேண்டும்.

இந்த 15 நாட்களிலும் பாலின் தரம் கொழுப்பு தரம் கால்நடை துறை, கூட்டுறவு துறை வாயிலாக ஆய்வு செய்யப்படும்.

ஊறுகாய் புல் திட்டம் குறித்து கால்நடை துறை இணை இயக்குநர் குமரன் கூறும்போது, சீசனில் அதிகமாக கிடைக்கும் சோளம் அல்லது தினை பசுந்தீவனங்களை காற்றுபுகாத முறையில் ஊட்டமூக்கிகளை கலந்து பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறை பதனத்தாள் அல்லது ஊறுகாய் புல் என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் தரமான பால் உற்பத்தி கிடைக்கும். கொழுப்பு விகிதமும் அதிகமாக இருக்கும்.

ஊறுகாய் புல்லில் புரதம், தாதுஉப்பு, செரிமான ஊட்டச்சத்து, கால்சியம் இருப்பதால் மாடுகளின் உடல் நலமும், இன விருத்தி செயல் திறன் அதிகரிக்கும். பேக்கிங் செய்யப்பட்ட இந்த ஊறுகாய் புல் ஓராண்டு வரை கெடாது என்பதால் கால்நடை விவசாயிகள் இதனை ஒரு வருமான தொழிலாக எடுத்து கூட செய்யலாம்.

ஆய்வு முடிந்து 75 சதவீத மானிய விலையில் ஊறுகாய் புல் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றார்.

Advertisement