வில்லியனுாரில் பேனர்கள் அதிரடியாக அகற்றம்

வில்லியனுார் ' 'தினமலர்' செய்தி எதிரொலியால் வில்லியனுார் நகர பகுதியில் வைத்திருந்த பேனர்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் அகற்றினர்.

வில்லியனுார், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, ஆரியபாளையம் மேம்பாலம் வரை சாலையின் இருபுறத்திலும், நகர பகுதியிலும் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்ட விரோத பேனர்களை அகற்றாமல் அலட்சியமாக இருந்தனர். போலீசாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரோலியாக நேற்று காலை பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை வடக்கு கோட்டம் சார்பில், உதவி பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர்கள் குலோத்துங்கன், தேவர், அருளானந்தன், ராஜேஷ் தலைமையில் போலீசார் முன்னிலையில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை துவங்கி கோட்டைமேடு வரை நகர பகுதியில் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.

தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து துறையினர் கண்டுகொள்ளாததால் வில்லியனுார் பைபாசில் பல இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அப்படியே உள்ளன.

நெடுஞ்சாலை துறையினர் பேனர்களை அகற்ற முன்வரவேண்டும்.

Advertisement