அவுரங்கசீப் கல்லறை அமைந்த நகரத்தின் பெயர் மாறுகிறது

30

மும்பை : மஹாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை அமைந்துள்ள குல்தாபாத் நகரம், ரத்னாபூர் என பெயர் மாற்றப்படவுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அவுரங்காபாதின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றப்பட்டது.


இந்த மாவட்டத்தின் குல்தாபாதில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக் கோரி, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


குல்தாபாதில் தான் அவுரங்கசீபின் மகன் ஆஸம் ஷா, நிஜாம் ஆஸப் ஜா உள்ளிட்ட சிலரின் கல்லறைகளும் உள்ளன. இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறை இருக்கும் குல்தாபாத் நகரின் பெயரை ரத்னாபூர் என மாற்றப் போவதாக, சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய் சிர்ஷாத் தெரிவித்தார். அவுரங்கசீப் கல்லறையை அகற்றுவதில் தீவிரமாக இருக்கும் தலைவர்களில் இவரும் ஒருவர்.


சஞ்சய் சிர்ஷாத் நேற்று கூறியதாவது:

அவுரங்காபாத் போல, தேவையற்ற பெயர்களைக் கொண்ட அனைத்து இடங்களின் பெயர்களையும் நல்ல பெயர்களாக மாற்றி வருகிறோம். அவுரங்கசீப் ஆட்சிக்கு முன், குல்தாபாத் நகரம், ரத்னாபூர் என்றுதான் அழைக்கப்பட்டது. அந்த பெயரை மீண்டும் கொண்டு வருகிறோம். வேறு ஒன்றும் இல்லை. மஹாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement