நெல்லையப்பர் கோவில் நிலத்தில்  வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்ட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பழமையானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோவில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக, 2024ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பரில், 'டெண்டர்' அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது. கோவில் நிலத்தில், கோவில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட முடியாது. ஹிந்து அறநிலையத் துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தில் அன்னதானக் கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது.

வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. கோவிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டியுள்ளன. சிதிலமடைந்துள்ள பல கோவில்கள் சீரமைக்க வேண்டியுள்ளன.

இவற்றின் மீது கவனம் செலுத்தாமல், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாகவும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே, வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement