மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் :கிருஷ்ணகிரி அருகே வணிக ஆய்வாளர் கைது

10

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இருதுகோட்டை கிராமம் தொட்டிக்குப்பத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா என்ற விவசாயி, தனது நிலத்தில் போடப்பட்டிருக்கும் போர்வெல்லுக்கு புதிய பூந்தோட்ட மின் இணைப்பு வாங்க தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக ஆய்வாளர் தனபால் என்பவரை அணுகினார்.

இந்நிலையில், தனபால், மின் இணைப்பு கொடுக்க ரூ.7,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று முனி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முனி கிருஷ்ணா, இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் தனபால் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடவடிக்கையின் படி, முனிகிருஷ்ணா, இன்று தேன்கனிக்கோட்டை தெற்கு உதவி பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் தனபாலிடம் ரசாயனம் தடவிய லஞ்ச பணம் ரூ.7,000-த்தை கொடுத்துள்ளார்.

அதை வாங்கிய தனபால், தனது மேசையின் இருந்த கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர்(பொ), கிருஷ்ணகிரி நாகராஜன் நேரடி மேற்பார்வையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை காவல் ஆய்வாளர் பிரபு, தனது குழுவினருடன் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் தனபாலை சுற்றி வளைத்து பிடித்தனர். லஞ்ச பணம் ரூ.7 000 மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர். அதை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, தனபாலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement