வில்வித்தை: ஜோதி-ரிஷாப் 'தங்கம்'

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி தங்கம் வென்றது.

அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.
ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, மெக்சிகோவின் செபாஸ்டியன் கார்சியா மோதினர். விறுவிறுப்பான போட்டி 144-144 என சமன் ஆனது. பின் 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய அபிஷேக் 9-10 என தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அபிஷேக் 141-145 என சீனதைபேயின் சீ-லுன் சென்னிடம் வீழ்ந்தார்.

Advertisement