பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

கொட்டாம்பட்டி : வஞ்சி நகரத்தில் 2 ஆண்டுகளான பின்னும், புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

இக் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். துாய்மை பாரத திட்டத்தின் கீழ், இரு ஆண்டுகளுக்கு முன் ரூ. 5.25 ல ட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிமுடிந்து இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் பொதுமக்கள் இன்றும் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமத்தில் சுகாதார சீர்கேடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் பயன்பாட்டிற்கு வரும் முன்பே தகரத்தில் அமைக்கப்பட்ட கூரையை காணவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக பொலிவிழந்து வரும் சுகாதார வளாகத்தால், மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு, சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதியினர் எதிர்பார்ப்பு.

Advertisement