கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; இயக்கப்படாத 70 சதவீத தமிழக லாரிகள்

கர்நாடகாவில் நேற்று முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியதால், தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக வழக்கமாக செல்லும் லாரிகளில், 70 சதவீதத்திற்கும் மேல் இயக்கப்படவில்லை.


கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும், 4,000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு, 3,000க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன.


இதன் வாயிலாக தமிழகத்திற்கும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தத்தால், அம்மாநிலத்திற்கு செல்லாமல், தமிழக பதிவு எண் உடைய மற்றும் பிற மாநில பதிவு எண் உடைய லாரிகள், தமிழக எல்லையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.


கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே பொம்மசந்திரா பகுதிகளில், லாரிகளை மொத்தமாக நிறுத்தி, கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 70 சதவீதத்திற்கும் மேலான லாரிகள், தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லவில்லை.


தமிழகம் - கர்நாடகா இடையே தினசரி சரக்கு போக்குவரத்துக்காக இயக்கப்படும், 700க்கும் மேற்பட்ட லாரிகளில், 50 சதவீதத்திற்கு மேல் இயக்கப்படவில்லை. கனிமவளங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகள் மட்டும், கர்நாடகா மாநிலத்திற்குள் நேற்று தொடர்ந்து இயக்கப்பட்டன.


தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது: கர்நாடகா லாரி உரிமையாளர் சங்க வேலை நிறுத்தத்துக்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், கர்நாடகா, அதன் வழியே செல்லும் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், 'பார்டர் செக்போஸ்ட்' அகற்றுதல், ஆன்லைனில் வழக்கு போடுவதை தவிர்த்தல், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக்



தமிழக கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் தமிழகம் முழுதும் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உரிய அங்கீகாரம் பெற்று, 3,000 கல்குவாரிகள், 3,000க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில், 40,000 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. குவாரிகளில் இருந்து தினம் சராசரியாக, 50 யூனிட் அடிப்படையில், 2 லட்சம் யூனிட் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் உத்தேச மதிப்பு, யூனிட்டுக்கு 5,000 ரூபாய் என்ற அளவில், 100 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தால் இது பாதிக்கப்படும்.நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர் ஜல்லி, எம் - சாண்ட் ஆகியன கிடைக்காமல் கட்டுமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.



பொருட்கள் விலை உயரும்



தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை உட்பட பல்வேறு வகையான பழங்கள், தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, கர்நாடகா வழியாக தான், மக்காச்சோளம், வெங்காயம், பூண்டு, எண்ணெய், பருப்பு போன்ற பல்வேறு வகையான பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை பலமடங்கு உயரும் அபாயம் உள்ளது.



- நமது நிருபர் -

Advertisement