பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

1

ஐதராபாத்: பண மோசடி வழக்கு தொடர்பாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போலி ஆவணங்களை தயாரித்து ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக, ஐதராபாத்தைச் சேர்ந்த பாக்யநகர் பிராபர்ட்டீஸ் இயக்குநர் நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன உரிமையாளர் சதீஷ் சந்திரா குப்தா மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனடிப்படையில், பாக்யநகர் பிராபர்ட்டீஸ், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

அப்போது, இந்த நிறுவனங்களிடம் இருந்து நடிகர் மகேஷ் பாபு பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார். ரூ.5.9 கோடியை, ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த பணமோசடி தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, ஏப்.,27ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement