வக்ப் நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்: நாசர்

சென்னை:சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

ம.ம.க., - ஜவாஹிருல்லா:
சென்னையில் மட்டும், வக்ப் தீர்ப்பாயம் உள்ளது. நீண்ட துாரம் பயணம் செய்து சென்னைக்கு வர வேண்டியுள்ளது. மதுரையில் வக்ப் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோல, கோவை, திருச்சியிலும், வக்ப் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். நீண்ட காலமாக எந்த சர்ச்சையும் இல்லாத இடத்தில் உள்ள மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் போன்றவற்றுக்கு பட்டா வழங்க வேண்டும்.

பயன்பாடு இல்லாத வக்ப் நிலங்களில், தனியார் பங்களிப்புடன் நீண்டகால குத்தகை அடிப்படையில், கல்லுாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். இதற்காக, 30 ஆண்டு கால குத்தகைக்கு அரசு வழங்க வேண்டும்.

அமைச்சர் நாசர்: வக்ப் சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, சென்னையில் வக்ப் தீர்ப்பாயம் உள்ளது. மதுரையில் தீர்ப்பாயம் அமைக்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திருச்சி, கோவையில் ஆய்வு செய்து, தேவை ஏற்படும் பட்சத்தில் அமைக்கப்படும்.

மசூதி, கபர்ஸ்தான், தர்கா, மதரஸா போன்றவற்றிற்கு பட்டா வழங்க, நில நிர்வாக ஆணையருக்கு குறிப்புகளுடன் கடிதம் அனுப்பபட்டுள்ளது. வக்ப் நிலங்களில், சமூகநல திட்டங்களை மேற்கொள்ள மனுக்கள் வரும் பட்சத்தில் பரிசீலனை செய்து, விதிகளுக்கு உட்பட்டு, நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement