கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கந்துறையில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் செட்டிகுளம் திருமண மண்டபத்தில் நடந்தது.

கலால் ஆணையாளர் வள்ளிகண்ணு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருஷ்ண பாபு தலைமை வகித்தனர். கூட்டத்தில் கல்குவாரிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவு செய்தனர். சிறு கனிம விதியை மீறி பல ஆவணங்கள் மறைக்கப்பட்டு இருப்பதால் கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது.

குறிப்பாக 80 மீட்டர் துாரத்திற்குள் அனுமன் நதி செல்வதாலும் பொது கட்டடங்கள் உள்ளதாலும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினர். இருக்கந்துறையில் ஏற்கனவே பல கல்குவாரிகள் உள்ளதாலும் விதிமுறைகளை மீறி இருப்பதால் அனுமதிக்க கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். சமூக ஆர்வலர்கள் முத்துராமன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்குவாரிக்கு ஆதரவாக ஒருவர் பேசியபோது எதிர்ப்பாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மோதலை தடுத்து அமைதி ஏற்படுத்தினர். இறுதியில் ஆதரவாளர்கள் ,எதிர்ப்பாளர்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்தனர்.

Advertisement