கூடுதலாக 1 லட்சம் டன் சோளம் கொள்முதல் செய்ய அரசு முடிவு

பெங்களூரு: ''விவசாயிகளிடமிருந்து கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் சோளம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, உணவு பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் முனியப்பா, பல்லாரி மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜமிர் அகமது கான், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பல்லாரி மாவட்ட விவசாயிகள், அமைச்சர் முனியப்பாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

கூட்டத்துக்கு பின், அவர் அளித்த பேட்டி:

பல்லாரி, ராய்ச்சூர், விஜயநகரா மாவட்டங்களில், பருவ காலத்தில் இம்மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் சோளம் விளைவிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளிடமிருந்து கூடுதலாக ஒரு லட்சம் டன் சோளம் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சோளம், 2024 - 25ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஆதரவு விலையில் வாங்கப்படும். இது தொடர்பாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், பயனாளிகளில் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, மூன்று கிலோ சோளம், இரண்டு கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement