இளம் எழுத்தாளருக்கு பாரதிதாசன் விருது முதல்வர் அறிவிப்பு

சென்னை:''பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, ஏப்., 29ம் தேதி முதல் மே 5 வரை, ஒரு வார காலத்திற்கு, தமிழ் வார விழா கொண்டாடப்படும். இளம் எழுத்தாளர் அல்லது கவிஞர் ஒருவருக்கு, பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர்வெளியிட்ட அறிவிப்புகள்:

மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் போன்றவற்றின் மொத்த வடிவம் தான் பாரதிதாசன். அவரது பிறந்த நாளையொட்டி, ஏப்., 29 முதல் மே 5 வரை, ஒரு வாரத்திற்கு, தமிழ் வார விழாகொண்டாடப்படும்.

தமிழகம் முழுதும், தமிழ் மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

அனைத்து மாவட்டங்களிலும், 'எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம்நோக்கி நடக்கிறது இந்தவையம்' என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை மையப்படுத்தி, கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடக்கும்.

சிறந்த தமிழறிஞர்கள், இளம் கவிஞர்கள் பங்கேற்பர்.

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் அல்லது கவிஞர் ஒருவருக்கு, 'பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். புகழ் பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை, அடிப்படையாக வைத்து, ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.மாணவர்கள் இடையே,தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்க, பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

தமிழ் இசை, நடனம் மற்றும் மரபுக் கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள், மாநிலம் முழுதும் நடக்கும்.

இதுபோன்ற தமிழ் நிகழ்ச்சிகள் வழியே, பாவேந்தர் பிறந்த நாள், தமிழ் மணக்கும் வாரமாக கொண்டாடப்படும்.

'வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்' என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை, இந்த விழாக்கள் வழியாக உருவாக்க வேண்டும். 'தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' என, தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல், இந்த அரசு காத்திடும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement