கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகள்

கோவை : கோவை மாவட்டத்தில்,அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்க மாநிலத் தலைவர் மாயாதேவி சங்கர் கூறியதாவது:

கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும், 400க்கும் அதிகமான மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் பெயரளவில் சுற்றறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில், 200 மழலையர் பள்ளிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன. சில பள்ளிகள் பிளே ஸ்கூல் அங்கீகாரம் பெற்றதைக் காட்டி, நர்சரி மற்றும் பிரைமரி வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. இதனால், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்புகாரை பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். தற்போது மாணவர் சேர்க்கை காலம் தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட கல்வி அதிகாரியிடம் (தனியார் பள்ளிகள்) கேட்டபோது, 'அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விபரங்கள் எங்களிடம் உள்ளன. புகார் தொடர்பாக தரவுகளை ஆராய்ந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement