சிறுவாபுரி கோவில் பக்தர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை:''சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்,'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

காங்., - துரை சந்திரசேகரன்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சிறப்பு திட்டம் ஏதேனும் செயல்படுத்தப்படுமா?

அமைச்சர் சேகர்பாபு: சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு, செவ்வாய்க்கிழமை 50,000; வார இறுதி நாட்களில், 10,000, மற்ற நாட்களில், 2,000 பக்தர்கள் வருகின்றனர். 2022ம் ஆண்டு கோவிலில், 1 கோடி ரூபாயில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

தற்போது, 16.50 கோடி ரூபாயில், பெருந்திட்ட வரைவு பணிகள் நடக்கின்றன. கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க, 67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

துரை சந்திரசேகரன்: திருத்தணி முருகன் கோவிலுக்கு, அடிப்படை வசதிகள் செய்யும் திட்டம் உள்ளதா?

அமைச்சர் சேகர்பாபு:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, திருத்தணிக்கு மாற்று வழி அமைக்க, 57.50 கோடி ரூபாயை அரசு மானியமாக முதல்வர் வழங்கி உள்ளார். வரும் காலங்களில், அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும்.

துரை சந்திரசேகரன்: அறுபடை வீடு அல்லாத பிற முருகன் கோவில்களில் திருப்பணிகள் நடக்கின்றனவா?

அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 110 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடு அல்லாத, 143 முருகன் கோவில்களில், 284 கோடி ரூபாய் மதிப்பில், 609 பணிகள் நடக்கின்றன. ஒட்டு மொத்தமாக 1,085,65 கோடி ரூபாய் மதிப்பில், 884 பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement