ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!

ராமநாதபுரம்: மது பாட்டில் வைத்து இருந்ததற்கு, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய போலீசார் மூவர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சிறப்பு சார்பு ஆய்வாளராக கனகசபாபதி, காவலர்களாக முத்து கருப்பையா, மாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவரிடம், இரண்டு மது பாட்டில் பறிமுதல் செய்ததுடன், இதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கி உள்ளனர்.
அப்போது, போலீசாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
ரூ.2.56 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2,56,000 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசுவிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




