பாப்புலர் முதலியார் வாய்க்காலைதுார் வார விவசாயிகள் கோரிக்கை



கரூர்:பாப்புலர் முதலியார் வாய்க்காலை துார் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில், புகழூர் ராஜவாய்க்காலில் இருந்து பிரிந்து செம்படாபாளையம், தளவாப்பாளையம், மேட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி என, 10 கி.மீ. தொலைவில் வாங்கல் வாய்க்காலுடன் கலக்கிறது பாப்புலர் முதலியார் வாய்க்கால். இந்த வாய்க்கால் வாயிலாக, 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்காலை பயன்படுத்தி விவசாயிகள் கோரை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். காவிரியாற்றில் நீர் திறக்கும்போது, வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். இதனை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் துார்வாரும் பணிகளுக்கு, குறிப்பிட்ட அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தாண்டு கூட, 5.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முழுமையாகவும், முறையாக மேற்கொள்ளப்படுவது கிடையாது.
பல்வேறு இடங்களில் கழிவு நீரும் வாய்க்காலில் கலப்பதால், மாசடைந்து விடுகிறது. இந்த வாய்க்காலை துார் வாருவதுடன், கழிவு நீரை வாய்க்காலில் திறந்து விடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement