அடகு கடையில் நகை திருட்டு மேலாளர் உட்பட இருவர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அடகு கடையில் நகைகள் திருட்டுப் போன சம்பவத்தில் பெண் மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மார்த்தாண்டம் அருகே கருங்கல் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்தவர் சஜிராஜ். கருங்கல் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இங்கு மாங்கரை ஞாறாங் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த பெமிலா 33, மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடையில் இருந்து சிறிது சிறிதாக 25 லட்ச ரூபாய் மதிப்புடைய 462 கிராம் நகைகள் மாயமாகி இருந்தது.

இது பற்றி பெமிலாவிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் நகை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெமிலா 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீத பணமோ, நகையோ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் சஜிராஜ் , கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து பெமிலா, அவரது நண்பர் விஜின் 34, உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பல்வேறு வங்கிகளில் அடகு வைத்திருந்த நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement