கண் விழித்திரை பாதிப்பில் கவனம் டாக்டர் அமர் அகர்வால் அறிவுரை

சென்னை: ''விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு கவனிக்காமல் விட்டால், வாழ்க்கை இருண்டதாக மாறிவிடும். கண்ணை பாதுகாப்பதில் அதிக கவனமும், விழிப்புணர்வும் அவசியம்,'' என, அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் கூறினார்.

அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், விழித்திரை சிகிச்சை முறையில் ஏற்பட்ட நவீன வசதிகள் குறித்த, 'விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்-2025' என்ற தலைப்பில் நேற்று, சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கை, வடசென்னை எம்.பி., கலாநிதி துவக்கி வைத்தார்.

கருத்தரங்கில், அகில இந்திய கண் சிகிச்சையியல் சங்க துணை தலைவர் மோகன்ராஜன் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள, 10 கோடிக்கும் மேலான நீரிழிவு நோயாளிகளில், 2 கோடி பேருக்கு மேல் கண் விழித்திரை பாதிப்பு உள்ளது. அவர்கள், கண்ணுக்குள் ரத்தக்கசிவு, தண்ணீர் தேங்குவது போன்ற பாதிப்புகளால் அவதிப்படுவர். பாதிப்பை, நவீன சிகிச்சை முறையில் குணப்படுத்த இந்த கருத்தரங்கம் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் பேசியதாவது:

விழித்திரை பாதிப்புக்கான நவீன சிகிச்சை தொடர்பாக, 15வது ஆண்டாக விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தி வருகிறோம்.

தற்போது, விழித்திரையில் ஊசி வாயிலாக சிகிச்சை அளிப்பது மிகவும் பயன் அளிக்கிறது.

எந்த நாட்டில் நவீன சிகிச்சை முறை வந்தாலும், அதை இந்திய மக்களிடம் சேர்க்க கவனம் செலுத்துகிறோம்.

இங்குள்ள நவீன சிகிச்சை முறைகளை, வெளிநாடுகளிலும் பயன்படுத்துகின்றனர். இது, மருத்துவ துறையின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது.

விழித்திரை பாதிப்பை கவனிக்காமல் விட்டால், வாழ்க்கை இருண்டதாக மாறிவிடும். கண்ணை பாதுகாப்பதில், அதிக கவனமும், விழிப்புணர்வும் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் அஸ்வின் அகர்வால் பேசியதாவது:

கருவில் உள்ள குழந்தையின் விழித்திரை பாதிப்பை கண்டறிந்து, குணப்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன.

முன்பு, 45 நிமிடங்கள் ஆன அறுவை சிகிச்சை, இப்போது 20 நிமிடங்களில் முடிகிறது. தையல் இன்றி, ஊசி மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்து சில மணி நேரத்தில், வீடு திரும்பலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement